Tuesday, 7 February 2017

மதுசூதனனைதான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்வதாக இருந்தது: ஓ.பி.எஸ்

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி, அம்மா நினைவிடத்திற்கு வந்து, அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன். என் மனசாட்சி உந்தப்பட்டதால் இங்கு வந்து சேர்ந்தேன். அம்மாவின் ஆன்மா என்னை உந்துபடுத்தியது. எனவே உங்களிடம் நான் நின்று கொண்டுள்ளேன். புரட்சி தலைவி அம்மா அவர்கள், நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருடைய உடல்நிலை, 70 தினங்கள் கழித்த பிறகு மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
கட்சியும், ஆட்சியும், காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்ற நிலையில், என்னை வந்து சந்தித்து கேட்டபோது, மாண்புமிகு அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று ஏற்பாடு என்ன தேவை என்று கேள்வி எழுப்பினேன். அசாதாரண சூழ்நிலை எழுந்தால் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் கேட்டு, அரை மணி நேரம், அம்மா நிலையை கண்டு அழுது புலம்பினேன். என்ன சொல்ல வருகிறீர்கள் என மீண்டும் கேட்டபோது, அம்மா இறந்துவிட்டால், கழக பொதுச்செயலாளர் முதல்வர் ஆகிய பொறுப்பை ஏற்று நடக்க உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். என்ன சொல்கிறீர்கள் என கேட்டேன். கழக பொதுச்செயலாளராக கழக அவைத்தலைவர் மதுசூதனன் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதல்வராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். நான் அதை மறுத்தேன். வற்புறுத்தலுக்கு பிறகே ஏற்றேன். ஜெயலலிதா இறந்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து திவாகர் சார் உங்களை முதல்வர் பதவியை விட்டுத்தர சொன்னார் என்று கூறினார். இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment