Thursday, 9 February 2017



ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அறப்போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அறப்போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எனப்படும் பங்களாவில் வசித்து வந்தார். அவர் திரை உலகில் புகழ் பெற்றிருந்த போது அந்த பங்களாவை தனது தாயார் சந்தியாவுடன் சேர்ந்து கட்டினார். 

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு தற்போது அந்த பங்களாவில் அவரது தோழி சசிகலா வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு சார்பில் எந்தவித அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் சசிகலா விற்கு எதிராக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் செய்து வரும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு இது தொடர்பாக அவர் தனது கருத்தையும், விருப்பத்தையும் வெளியிட்டார். 

அப்போது அவர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் மறைந்த முதல்-அமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு அவர்கள் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அது போல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும்’’ என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், ‘‘போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்பட வேண்டும். மேலும் அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கி அங்கு வைக்க வேண்டும். 

இந்த நினைவு இல்லத்தை தினமும் பொது மக்கள் வந்து பார்வையிட்டு செல்வதற்கேற்ப வசதிகள் செய்ய வேண்டும். இதன் மூலம் ஜெயலலிதா பற்றியும், அவரது வாழ்க்கையின் சிறப்பையும் பொது மக்கள் அறிந்து கொள்ள முடியும்’’ என்று கூறியுள்ளார். 

ஜெயலலிதா வீடு அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். அந்த அரசாணையை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிறப்பித்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. 

இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியானது. ஆனால் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவதற்கான உத்தரவில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டாரா? என்பதை தலைமை செயலக வட்டாரங்களால் உறுதி செய்ய இயலவில்லை. 

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு தெரிவித்த மதுசூதனனுக்கு நன்றி தெரிவித்தார். தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவரையும் கைகூப்பி வரவேற்பதாக ஓ.பி.எஸ். கூறினார். கழகத்தின் நிரந்தர அவைத்தலைவர் மதுசூதனன் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.

பேசும் போது போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் வரை அறப்போராட்டம் தொடரும்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ளார்கள்.சசிகலா தரப்பு தங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயார் என கூறினார்.

No comments:

Post a Comment